search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமை வழிச்சாலை திட்டம்"

    திருவண்ணாமலையில், சென்னையில் இருந்து சேலம் வரை அமைக்கும் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    சென்னையில் இருந்து சேலம் வரை பசுமை வழிச்சாலை என்ற பெயரில் 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், இத்திட்டத்திற்காக அளவர்களை (சர்வேயர்கள்) அளவீடு பணிக்கு தேர்வு செய்யும் பணியை ரத்து செய்யக் கோரியும் பசுமை வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பினர் திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை விஸ்தரிப்பு நில எடுப்பு தனி தாசில்தார் அலுவலகத்திலும், திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.

    பசுமை வழிச்சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 910 அடி அகலத்திற்கும் அமைக்க உள்ளதாக தெரிகிறது.

    இதனால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு ஏரி, குளம், கிணறுகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு நீர் வளம், நில வளம், மலை வளம், வன வளம் அழிந்து எங்கள் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமும் பாழாகும். மக்களிடம் இருந்து விளை நிலம் அபகரிக்கப்படும்.

    இவ்வாறு அமைக்கப்படும் 8 வழிச் சாலை தங்களுக்கு தேவையில்லை. மேலும் இந்த 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை கைவிட வேண்டும். இந்த நிலையில் இத்திட்டத்திற்காக அளவர்களை பணிக்கு எடுத்து அளவீடு செய்யும் பணி தொடங்குவதாக தெரிகிறது. அளவர்களை அளவீடு பணிக்கு தேர்வு செய்யும் பணியை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×